இந்தியா, ஒடிசா மாநிலத்தில் உயிரிழந்த தனது தங்கையின் வங்கி கணக்கில் பணம் எடுக்க சகோதரியின் எலும்புக்கூட்டை சுமந்து சென்ற அண்ணனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது தங்கையின் வங்கிக் கணக்கில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுப்பதற்காக அவரது சகோதரன் வங்கிக்கு சென்றுள்ளார்.
ஆனால் வங்கி அதிகாரிகள் வங்கி கணக்குக்கு உரியவர்கள் நேரில் வர வேண்டுமென மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியதால் என்ன செய்வது என்பதை தெரியாது அந்த நபர் நேரடியாக சுடுகாட்டுக்கு சென்று அங்கு உயிரிழந்த தன்னுடைய தங்கையின் எலும்பு கூண்டை தோண்டி எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மாநிலம், கெஞ்சார் மாவட்டத்தில் உள்ள ஒடிசா கிராமிய வங்கி கிளையில் இந்த சம்பவம் நிகழ்ந்து. தங்கையின் பணத்தை மீட்பதற்காக ஜீது முண்டா என்ற அந்த கிராமவாசி, பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், இறப்புச் சான்றிதழ் போன்ற முறையான ஆவணங்கள் இல்லாததாலும், கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் எனக் கூறியதாலும் வங்கி ஊழியர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
விரக்தியடைந்த ஜீது, அடக்கம் செய்யப்பட்ட தன் சகோதரியின் உடலை தோண்டி எடுத்து, ஒரு துணியில் சுற்றி, தோளில் சுமந்து வங்கிக்குக் கொண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் கூறுகையில், "எங்கள் ஊழியர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றச் சொன்னார்கள். ஆனால், விழிப்புணர்வு இல்லாமையால் அந்த நபர் தவறான முடிவை எடுத்துவிட்டார். இறப்புச் சான்றிதழைச் சமர்ப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் பணத்தை வழங்கத் தயாராக உள்ளோம்," என்று தெரிவித்துள்ளது.








