அமெரிக்க அரசு நெறிமுறைகள் அலுவலகம் வெளியிட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2025 ஆம் ஆண்டில் தனது கிரிப்டோகரன்சி சார்ந்த செயல்பாடுகள் மூலம் சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் சுமார் 4.9 பில்லியன் மலேசிய ரிங்கிட் வருமானம் ஈட்டியுள்ளார். 1978-ம் ஆண்டு சட்டத்தின்படி அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் தங்களின் வருமானம் மற்றும் சொத்துக்களைக் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த 900 பக்கங்களுக்கும் மேலான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிரம்ப் குடும்பத்தின் ஆதரவோடு செப்டம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட 'வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்' என்ற கிரிப்டோ தளத்தின் மூலம் அவருக்கு சுமார் 550 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது. மேலும், 2025 ஜனவரியில் அவர் அதிபராகப் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'US$TRUMP' கிரிப்டோகரன்சியின் உரிம ஒப்பந்த ராயல்டி மூலம் 635 மில்லியன் டாலர் வருமானமும் கிடைத்துள்ளது.
கிரிப்டோகரன்சி துறையில் டிரம்ப் மேற்கொண்ட இந்த செயல்பாடுகளால், ஃபோர்ப்ஸ் இதழின் கணிப்புப்படி, 2024 முதல் 2026-க்குள் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 2.3 பில்லியன் டாலரிலிருந்து 6.5 பில்லியன் டாலராக கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதிபராகப் பதவியில் இருக்கும்போதே கிரிப்டோகரன்சி துறையில் முதலீடு செய்ததும், அதே நேரத்தில் இத்துறையை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான தளர்வுகளைக் கொண்டுவந்து அதன் சொத்து மதிப்பை உயர்த்தியதும் டிரம்ப் மீது பல்வேறு பரஸ்பர நல முரண்பாடு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. தற்போது டிரம்பின் இந்த சொத்துக்கள் அவரது மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் நிர்வகிக்கும் ஒரு அறக்கட்டளையின் கீழ் வைக்கப்பட்டிருந்தாலும், டிரம்பின் அதிபர் பதவிக்காலம் முடிந்தவுடன் அவர் மீண்டும் இதன் முழுக் கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அதன் விதிகள் அமைக்கப்பட்டுள்ளன.








