புதுடில்லி, மே.03-
இந்தியா, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்கி அணையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலாத் துறையினரால் இயக்கப்பட்ட 20 ஆண்டுகள் பழமையான சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காணாமல் போன 5 வயது சிறுவன், அவனது மாமா ஆகியோரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டதை அடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இறுதிவரை தேடப்பட்டு வந்த கடைசி நபரின் உடலும் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் தங்களது தேடுதல் பணியை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளனர். வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உட்பட பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








