கடும் வெப்ப அலைக்கு இடையே தெற்கு ஸ்பெயின்-இன் கிராமப்புறப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தலூசியா பிராந்தியத்திற்கு உட்பட்ட அல்மேரியா மாகாணத்தின் பெடார் பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் வாகனங்களுக்குள்ளேயே இறந்து கிடந்ததாக பிராந்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், ஐந்து தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடினர்.
இந்தக் காட்டுத்தீயில் சிக்கி ஒரு பெண் உட்பட மேலும் ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்ததில் காய்ந்த செடிகளில் தீப்பிடித்து, அது காடுகளுக்குள் வேகமாகப் பரவியிருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தீ விபத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆபத்தான சூழ்நிலை காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு, சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கலாச்சார மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் நாட்டின் ராணுவ அவசரக் காலப் பிரிவும் விரைவில் களமிறங்கவுள்ளது.








