எழுத்தாளர் ஈ. ஜீன் கரோலுக்கு டொனால்ட் டிரம்ப் 50 லட்சம் டாலர் சுமார் 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியாக்கப்பட்டுள்ளதை அடுத்து, அந்தத் தொகையை உடனடியாக அவரிடம் ஒப்படைக்குமாறு ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி லூயிஸ் ஏ. கப்லான் உத்தரவிட்டுள்ளார். 1990-களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டன் வணிக வளாகம் ஒன்றில் டிரம்ப் தமக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், பின்னர் அதுகுறித்து 2019-இல் தாம் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டபோது டிரம்ப் அதனைப் பொய் என்று கூறி அவதூறு பரப்பியதாகவும் கரோல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 2023-ஆம் ஆண்டே டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அண்மையில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றப் பாதுகாப்புக் கணக்கில் வைக்கப்பட்டிருந்த இந்த இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து தற்போது சுமார் 58 லட்சம் டாலர் கரோலுக்கு வழங்க நீதிபதி லூயிஸ் கப்லான் ஆணையிட்டுள்ளார். டிரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் இந்தத் தொகையை வழங்குவதை நிறுத்த அவசரக் காலத் தடையுத்தரவு கோரி மேல்முறையீடு செய்தபோதிலும், அப்பீல் நீதிமன்றம் அதனை நிராகரித்து விட்டது. மேலும், மற்றொரு அவதூறு வழக்கில் டிரம்பிற்கு விதிக்கப்பட்ட 8.33 கோடி டாலர் அபராதத்திற்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணை தனியாகத் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








