May 6, 2026
Thisaigal NewsYouTube
தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதி மரணம்
உலகச் செய்திகள்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதி மரணம்

Share:

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன்-ஹீ அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஷின் ஜாங்-ஓ, தீர்ப்பு வழங்கிய சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளார்.

சியோல் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள பூந்தோட்டத்தில் அவர் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவரது உடையில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "மன்னித்து விடுங்கள். நான் எனது விருப்பப்படியே செல்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இருப்பினும், அதில் இந்த வழக்கைப் பற்றியோ அல்லது முன்னாள் முதல் பெண்மணியைப் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையில், கிம் கியோன்-ஹீ-க்கு கீழ் நீதிமன்றம் விதித்திருந்த 20 மாத சிறைத்தண்டனையை, நீதிபதி ஷின் ஜாங்-ஓ நான்கு ஆண்டுகளாக உயர்த்தி தீர்ப்பளித்தார். பங்குச் சந்தை மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. நேர்மையான நீதிபதி என்று பெயர் பெற்ற இவரது திடீர் மறைவு தென் கொரிய நீதித்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News