பீஜிங்: சீனாவின் பீஜிங் விமான நிலையத்துக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியா விமானம் வருவதாக இருந்தது. இதனால் சர்வதேச பயணிகள் பலரும் ஆர்வமுடன் அந்த விமானத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கான காரணமும் தெரியாமல் மர்மம் நீடிக்கிறது.
உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா... வெளி உலக தொடர்பு இன்றி நாட்டு மக்களை இரும்புத்திரை போட்டு அந்த நாட்டை கிம் ஜாங் உன் வைத்து இருக்கிறார். அதுவும் கொரோனாவுக்கு பிறகு தனது எல்லைகளை முற்றிலுமாக வடகொரியா மூடிக்கொண்டது. சர்வதேச நாடுகளுக்கு செல்லும் விமானங்களையும் அந்ந நாடு முற்றிலும் நிறுத்தியது.
இதனால், வடகொரியாவில் என்னதான் நடக்கிறது என்ற மர்மம் அகன்ற பாடில்லை. வடகொரியாவின் விமானம் ரத்து ஆனதற்கான காரணம் குறித்து சீன வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பெய்ஜிங் - பியாங்யாங் இடையேயான விமான போக்குவரத்து தொடங்குவதற்கான அனுமதி உள்ளிட்ட விவரங்கள் பற்றி மட்டுமே தெரியும் என்றும் விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாது எனவும் கை விரித்தனர்.
இதையடுத்து, பெய்ஜிங்கில் உள்ள வடகொரியா விமான நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அங்கு கிடந்த சோஃபா ஒன்றில் குறட்டை விட்டு ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்தார். கதவை தட்டிய சிறிது நேரத்தில் உள்ளிருந்து வந்த ஒரு ஊழியர் எங்களுக்குமே எதுவும் தெரியாது எனக் கூறியபடி உள்ளே சென்று விட்டார்.