புதுடில்லி, மார்ச்.10-
மேற்காசியாவில் அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று முதல் உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோயம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதால், விரைவில் தமிழகத்திலும் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்காசிய போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள்கள் விநியோகமானது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தடைபட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
உலகச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாடானது, இந்தியச் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவுக்குத் தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் வளைகுடாவில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.








