அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாம்களில் ஒன்றான, பில்லியன் டாலர் மதிப்பில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்கரிய "அலிகேட்டர் அல்காட்ராஸ்" மூடிவிடப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளை நாடுகடத்தும் திட்டத்தின் அடையாளமாக ஓராண்டுக்கும் குறைவான காலமே இயங்கிவந்த இந்த முகாம், எவ்விதக் கைதிகளும் இல்லாத நிலையில் தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளதாக புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் அறிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் பழங்குடியின மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஒரு கைவிடப்பட்ட விமான நிலையத்தில் வெறும் எட்டு நாட்களில் இந்த முகாம் அவசரமாகக் கட்டமைக்கப்பட்டது. முதலீடு செய்யப்பட்ட பில்லியன் டாலர் நிதி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக எழுந்த தொடர் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது முகாமிலிருந்த கடைசி கைதிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டோ அல்லது நாடுகடத்தப்பட்டோ உள்ள நிலையில், இந்த நிலத்தை மீண்டும் இயற்கை பாதுகாப்புப் பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








