துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி, பொதுமக்கள் தரப்பில் ஒருவர் மற்றும் ஆயுதமேந்திய சந்தேக நபர் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். ராணுவ உடையில் இருந்த நபர் ஒருவர் ஜன்னல் வழியாக துப்பாக்கியை நீட்டுவதை சாட்சிகள் பார்த்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீது அந்த நபர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இறுதியில் அந்த சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி முகமது லமின் பென்ரெடோவான் என்றும், பொதுமக்கள் தரப்பில் உயிரிழந்தவர் மைக்கேல் மிஸ்ராஹி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் யூதர்கள் வாழும் பகுதியில் நடந்ததால் இது யூதர்களுக்கு எதிரான தாக்குதலாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், குற்றவாளியின் தங்கும் அறையில் இருந்து பெண்களை இலக்காகக் கொண்ட 100 பக்கங்களுக்கும் மேலான வன்முறை அறிக்கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆபாசப் படங்கள் மற்றும் தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ள அந்த நபர், 'இன்செல்'- பெண்களால் நிராகரிக்கப்பட்டதால் தீவிரவாத சிந்தனைக்கு தள்ளப்படும் ஆண்கள் துணை கலாச்சார சித்தாந்தத்துடன் தொடர்புடையவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








