சிங்கப்பூர், ஜூன்.21-
மோசடி கும்பலின் உத்தரவின் பேரில் ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகளை வசூலிப்பதற்காக சிங்கப்பூருக்கு வந்ததாகக் கூறப்படும் மூன்று மலேசியர்கள், அந்நாட்டில் நுழைந்த ஆறு மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 முதல் 24 வயதிற்க்குட்பட்ட அவர்கள், எல்லைத் தாண்டிய மோசடி நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகின்றது.
சிங்கப்பூர் போலீசார், அவர்களிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 69 வங்கி அட்டைகளை பறிமுதல் செய்ததுடன், சுமார் 2 லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் ரொக்கமும் இந்த வழக்குடன் தொடர்புடையதாக கண்டறிந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவர் மீது, குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்ட பணத்தை மறைக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 5 லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








