இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ரயில் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 89 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். லண்டனுக்கு வடக்கே பெட்ஃபோர்ட் பகுதியில் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது.
லண்டன் செயின்ட் பான்க்ராஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் ரயில்வேக்குச் சொந்தமான இரண்டு ரயில்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த மோதலின் போது ஏற்பட்ட அதிர்வில் ரயிலுக்குள் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். ரயிலின் உள்ளே புகை மூட்டம் சூழ்ந்ததால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு கதறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 89 பேரில் 11 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் ரயிலை இயக்கிய ஓட்டுநர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக லண்டனுக்கான ரயில் சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து ரயில் விபத்து புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.








