கோடைகால வெப்பத்தைத் தணிப்பதற்காக இஸ்கான் கோயிலின் நுழைவாயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தெளிக்கும் மின்சாரக் கூலர் ஒன்றிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், 21 வயது இளம் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் பகுதியில் திங்கள்கிழமை அன்று இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்த அபிக்யான் குப்தா என்ற அந்த இளைஞர், தனது தந்தை அனில் குமார் குப்தாவுடன் கோயிலுக்கு வழிபட வந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். உயிரிழந்த தன் மகனை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில், அந்த தந்தை பாசத்தோடு போராடும் காட்சி பார்ப்பவர் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
இந்த மின்விபத்துக்குக் கூலரின் முறையற்ற பராமரிப்பு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகப் பிருந்தாவன் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








