பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சமூக ஊடகத் தளங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியையும் மனநலத்தையும் பெருமளவில் பாதித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையின் கீழ் டிக்டாக், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ், ஸ்னாப்சாட் மற்றும் யூடியூப் போன்ற முன்னணி சமூக ஊடகப் பயன்பாடுகள் அனைத்தும் கொண்டுவரப்பட உள்ளன. அதே நேரத்தில், வாட்ஸ்அப் மற்றும் சிக்னல் போன்ற செய்திப் பரிமாற்ற செயலிகளுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது வரும் 2027 ஆம் ஆண்டு வசந்த காலத்திற்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளின் இயல்பான சிறுவயது வாழ்க்கையை அவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்காகவும், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா இதேபோன்ற தடையை விதித்திருந்த நிலையில், தற்போது பிரித்தானியா அதைவிடக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த "ஆஸ்திரேலியா பிளஸ்" திட்டத்தை அறிவித்துள்ளது. சமூக ஊடகத் தடையுடன் சேர்த்து, ஆன்லைன் கேமிங் மற்றும் நேரலை தளங்களில் முன்பின் தெரியாத அந்நியர்கள் குழந்தைகளைத் தொடர்புகொள்வதைத் தடுக்கும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.








