ஜி7 உச்சிமாநாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணி திடீரென வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, முகமூடி அணிந்த இளைஞர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப்புகை வீசி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பிரான்சின் எவியான் நகரில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 60-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஒன்றுகூடி இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆரம்பத்தில் மக்கள் பாடல்களைப் பாடியும், நடனமாடியும் அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சுமார் 20,000 பேர் கலந்துகொண்ட இந்த அமைதியான பேரணியில், திடீரென 'பிளாக் பிளாக்' என்ற தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த சுமார் 600 முகமூடி அணிந்த நபர்கள் ஊடுருவினர்.
அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா கார் ஒன்றிற்குத் தீ வைத்ததுடன், வணிக வளாகங்களின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அடித்து நொறுக்கினர். மேலும், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மற்றும் ஐநா அகதிகள் முகமை ஆகியவற்றின் அலுவலகக் கட்டடங்களைத் தாக்கி சேதப்படுத்தினர்.
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து, கலகத் தடுப்பு போலீஸார் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பலரைக் கைது செய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், சொத்துச் சேதங்கள் ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.








