வடக்கு அயர்லாந்தில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள், நிறத்தின் அடிப்படையில் மக்களை இலக்கு வைக்கும் "இனவாதக் குண்டர்தனம்" என்று பிரிட்டனின் வடக்கு அயர்லாந்து விவகாரங்களுக்கான அமைச்சர் ஹிலாரி பென் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து மூண்ட இந்த வன்முறைகளில், முகமூடி அணிந்த கும்பல் வெளிநாட்டவர்களின் வீடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்களுக்கும் தீவைத்துள்ளது. இந்த அசம்பாவிதங்களின்போது, காரில் செல்பவர்களை வழிமறித்து அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நிறத்தின் அடிப்படையில் விசாரித்துத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை இன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வரும் நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது 12 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள் வழி பரப்பப்படும் வதந்திகள் மற்றும் எலோன் மஸ்க் போன்ற பிரபலங்களின் பதிவுகள் இந்த வன்முறையை மேலும் தூண்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கருத்துரைத்த அமைச்சர் ஹிலாரி பென், நாட்டின் சட்டமும் காவல்துறையும் தங்களின் கடமையைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய சட்டவிரோதக் குண்டர்தனங்களுக்கு எவ்வித நியாயமும் கற்பிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.








