நவுல் புயல் காரணமாக தெற்கு சீனாவில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவைகள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹங்காங் முதல் குவாங்டூங் மாகாணம் வரையிலான கடலோரப் பகுதிகளில் இந்தப் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குவாங்டூங் மாகாணத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகள் அனைத்தும் பாதுகாப்புக்காகத் துறைமுகங்களுக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புயல் எச்சரிக்கை காரணமாகக் குவாங்டூங் மாகாணத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சாவோஜோ நகரில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகளவில் அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடாக இருந்தாலும், சீனா 2060-க்குள் கார்பன்-நடுநிலை இலக்கை அடையத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.








