அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலை மையமான ஜான் எஃப். கென்னடி கலை மையத்தின் முகப்பில் இருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை அகற்றும் பணிகள் சனிக்கிழமை அதிகாலை தீவிரமாக நடைபெற்றுள்ளன. நீதிமன்றம் விதித்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையின் காரணமாகப் பாதுகாப்பு கருதி இப்பணிகள் சில மணி நேரங்கள் தாமதமாகி சனிக்கிழமை அதிகாலையில் தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த கலை மையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகத் தன்னை நியமித்துக் கொண்டதுடன், அதன் பெயரை 'டிரம்ப்-கென்னடி கலை மையம்' என்றும் மாற்றியமைத்தார். இந்த நடவடிக்கையை எதிர்த்து, கலை மையத்தின் குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி எம்பியான ஜாய்ஸ் பீட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மத்திய நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் கூப்பர், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி கலை மையத்தின் பெயரை மாற்றியமைக்க நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும், ஜூன் 12ஆம் தேதிக்குள் டிரம்ப்பின் பெயரை அனைத்து இடங்களிலிருந்தும் நீக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டார். மேலும், கலை மையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மூடிப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இருந்த நிர்வாகத்தின் திட்டத்திற்கும் நீதிபதி தடை விதித்தார்.
இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி டிரம்ப் நிர்வாகம் தாக்கல் செய்த அவசர மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை நிராகரித்தது. கலை மையத்தின் இணையதளப் பக்கங்களில் இருந்து டிரம்ப்பின் பெயர் ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், கட்டிடத்தின் முகப்பில் இருந்த பெரிய எழுத்துக்களை அகற்றும் பணிகளைப் பொதுமக்கள் பலர் நேரில் கூடிப் பார்வையிட்டனர். டிரம்ப் தரப்போ, பெயர் நீக்கத்தால் கலை மையத்திற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று வாதிட்டுள்ளது.








