அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதற்கு கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளது உலக நாடுகளிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, உலகளவில் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை எவ்வித கட்டணமும் இன்றி முழுமையாகத் திறக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் ஹார்முஸ் நீரிணையின் எதிர்கால கடல்சார் சேவைகளை ஈரானும் ஓமானும் இணைந்து நிர்வகிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தாங்கள் நுழைவுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப் போவதில்லை என்றும், மாறாக கப்பல்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, கடல்சார் வழிகாட்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காப்பீடு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களை வசூலிக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார்.
இயற்கையாக அமைந்த சர்வதேச நீர்வழிகளில் இதுபோன்று கட்டணம் வசூலிப்பது சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு எதிரானது என்றும், தாக்குதல் நடத்தாமல் இருப்பதை ஒரு சேவையாகக் கருதி கட்டணம் கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சர்வதேச கடல்சார் வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலகத் தலைவர்களிடையே பெரும் விவாதத்தையும், அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் நம்பகத்தன்மை மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.








