காட்டுக்கரடிகள் மனிதர்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருவதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காகப் பள்ளிகளுக்கு கரடி எதிர்ப்புத் தெளிப்பான்கள் வழங்கப்படவுள்ளன. ஜப்பானின் டோக்கியோ புறநகர்ப் பகுதியான ஹச்சியோஜி உள்ளாட்சி அரசாங்கம் இதற்கான அவசரகால நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பள்ளிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு சுமார் 700 தெளிப்பான்களை வாங்குவதற்கும், நகரும் மின்சார வேலிகள் மற்றும் அதிக அதிர்வெண் ஒலி எழுப்பும் கருவிகளைப் பொருத்துவதற்கும் 15 மில்லியன் யென் சுமார் 93,000 அமெரிக்க டாலர் செலவிடப்படவுள்ளது.
ஜப்பானில் கடந்த நிதியாண்டில் கரடித் தாக்குதல்களால் 13 பேர் உயிரிழந்த நிலையில், நடப்பு ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர். காடுகளில் கரடிகளுக்குக் கிடைக்கும் இயற்கை உணவுகளின் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, அவை உணவைத் தேடி நகரப் பகுதிகளுக்குள் ஊடுருவுவது பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், கரடிகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்தால் காவல்துறையினர் மற்றும் வேட்டைக்காரர்களுடன் இணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உள்ளாட்சி நிர்வாகம் தயாரித்து வருகிறது.








