வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் புதன்கிழமை மதியம் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளபடி, முதலில் ரிக்டர் அளவில் 7.2 ஆகவும், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் மற்றொன்று 7.5 ஆகவும் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகளும், வீடுகளும் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது பொது விடுமுறை தினம் என்பதால் மக்கள் பலரும் வீடுகளில் இருந்தனர். அதிர்வுகளை உணர்ந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கியிருக்கலாம் என்பதால் தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கராகஸின் சாக்காவோ பகுதியில் மட்டும் கட்டிடங்கள் இடிந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கப் பேரழிவால் 10,000 முதல் 1,00,000 பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் முதற்கட்டமாக மதிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புவேர்ட்டோ ரிகோ, கரீபியன் தீவுகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் ஒரு மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்க பாதிப்புகளைத் தொடர்ந்து சில பகுதிகளில் பள்ளிகள் மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகள் அடுத்த திங்கட்கிழமை வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.








