தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்றார்.
நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் உரையிலேயே திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
தற்போதைய நிதிநிலையின் படி, 10 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் சுமையை விட்டுச் சென்றதாகவும், மாநிலக் கருவூலத்தை காலி செய்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் விஜயின் உரைக்கு எதிர்வினையாற்றிய ஸ்டாலின், அரசாங்கத்தில் நிதியில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தார்.
அரசாங்கத்தில் போதுமான நிதியுள்ளதாகவும் அதனை மக்களுக்கு வழங்க மனமும், திறமையும் தான் தேவை என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டமானது இன்று காலை தொடங்கியது.
இடைக்கால சபாநாயகர் எம்.வி.கருப்பையா முன்னிலையில், விஜய் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
அதன் பின்னர், சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் சென்ற விஜய், அங்கு அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.








