பாவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ தீவில் பெய்த கனமழையால் இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததுடன், 6 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவிலான மிகப் பெரிய சூறாவளியாகக் கருதப்படும் 'பாவி' தைவானை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தைவானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், ஜப்பானின் தொலைதூர தீவுகள் மற்றும் சீனாவின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தைவானில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.








