நடிகர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்னதாக நடித்த "ஜன நாயகன்" திரைப்படம் இணையதளங்களில் கசிந்ததால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட, அவர் அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான "ஜன நாயகன்" திரைப்படம் விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 500 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம், ஏப்ரல் 9-ஆம் தேதி எதிர்பாராத விதமாக இணையதளங்களில் கசிந்தது. முதலில் சில காட்சிகளும், பின்னர் முழுத் திரைப்படமும் உயர்தர வடிவில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
படக்கசிவு காரணமாகத் தயாரிப்பாளர்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை உணர்ந்த நடிகர் விஜய், தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டத் தான் உதவுவதாக உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, அவர் தனது அரசியல் பணிகளுக்கு இடையே மேலும் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக வெற்றித் கழகத்தின் லைவராகப் போட்டியிடும் விஜய்யைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் திரைத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்தக் கசிவு தொடர்பாகத் தமிழக சைபர் கிரைம் போலீஸார் ஏற்கனவே 6 பேரைக் கைது செய்துள்ளனர். சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இச்செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.








