நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜன நாயகன்' படத்தின் முக்கியக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்னும் தணிக்கைக் குழுவின் சான்றிதழுக்காகக் காத்திருக்கும் நிலையில், சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலான காட்சிகள் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ளன.
இணையத்தில் கசிந்துள்ள இந்த வீடியோவில் விஜய்யின் அறிமுகக் காட்சி, சண்டைக் காட்சிகள் மற்றும் படத்தின் தலைப்பு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எக்ஸ், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இந்தப் பதிவுகள் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. சில காட்சிகள் ஒரு திரையரங்கில் சோதனை திரையிடலின் போது ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்டது போல் தெரிவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயலால் ஆத்திரமடைந்துள்ள விஜய் ரசிகர்கள், வீடியோக்களைப் பகிர்பவர்களுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ரசிகர் மன்றங்கள் சார்பில் இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய காட்சிகளைப் பகிரும் கணக்குகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே தணிக்கை அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதால் 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இது ஒரு திட்டமிட்ட சதி என்று விஜய் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது நடந்துள்ள இந்தக் கசிவு படக்குழுவினருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.








