நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
சென்சார் சிக்கல்கள் காரணமாகத் திரையரங்கு வெளியீடு தள்ளிப்போயுள்ள சூழலில், இப்படத்தின் முக்கியக் காட்சிகள் மற்றும் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், "ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மனிதர்களின் ரத்தம், வியர்வை மற்றும் உழைப்பால் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து திருட்டுத்தனமாகப் பார்ப்பதைத் தவிர்க்கவும். ரசிகர்கள் திரையரங்க வெளியீட்டிற்காகக் காத்திருந்து அங்கேயே படத்தைப் பார்க்க வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "இத்தகைய சட்டவிரோதச் செயலுக்குக் காரணமானவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமைகளையும், உழைப்பையும், இந்தத் திரையுலகையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று அவர் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து நடிகர்கள் சிரஞ்சீவி, குஷ்பூ, ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் பின்னடைவுக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து, "பைரசியை ஒழிப்போம்" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.








