உலகளாவிய ரசிகர்களுக்காகத் தமிழ் இசையின் தனித்துவத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று பிரபல பின்னணிப் பாடகி தீ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல ‘விஸ்வா ரெக்கார்ட்ஸ்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அவர், தனது புதிய சுயாதீனப் பாடலான ‘வாரி வாரி’ வெளியீடு குறித்து வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இதனைப் பகிர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பாரம்பரியம், ஆஸ்திரேலிய வளர்ப்பு மற்றும் சென்னை கலைப்பயணம் எனத் தனது பன்முக அடையாளங்கள் இசையில் வெளிப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு புலம்பெயர் சிறுமியாகத் தொடக்கத்தில் தமிழை முழுமையாகக் கற்கத் தயங்கிய போதிலும், தற்போது தமிழ் மொழியின் மீதும் அதன் கவிதைகள் மற்றும் நாடோடி இசை வடிவங்கள் மீதும் தனக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேசக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும்போது தென்னிந்திய கிராமிய இசையின் தாளக் கட்டுகளுக்கு அவர்கள் காட்டும் ஆர்வம் தமக்கு வியப்பை அளிப்பதாகவும், உலக மேடைகளில் தமிழ் இசையின் தன்மையைக் குறைக்காமல் அதன் முழுமையான உலகத்தை அப்படியே கொண்டு சேர்க்க விரும்புவதாகவும் தீ உறுதியளித்துள்ளார்.








