நீட் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு நடிகை ஜோதிகா தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், மாணவர்களின் எதிர்காலம், பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்காகத் தான் மாணவர்களுடன் நிற்பதாகத் தெரிவித்தார். கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், தற்போதைய கல்வி முறையில் மாணவர்கள் படும் துயரங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் மாணவர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் இளைஞர் அமைப்புகளின் தலைவர்களையும் அவர் பாராட்டியுள்ளார். நாட்டின் எதிர்காலத்திற்காக அச்சமின்றிக் குரல் கொடுத்துவரும் இளைய தலைமுறையினருடன் நிற்பதில் பெருமிதம் கொள்வதாகவும் ஜோதிகா தனது பதிவில் தெரிவித்தார்.








