இந்தியா, மே 30-
நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும், தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவருமான மோகன் ராஜா இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக வலம் வந்தவர் மோகன். அவரின் மூத்த மகன் தான் ராஜா. இவர் கடந்த 2001-ம் ஆண்டு வெளிவந்த ஹனுமன் ஜங்க்ஷன் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இது தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த தென்காசிப்பட்டினம் படத்தின் ரீமேக் ஆகும். இதையடுத்து கடந்த 2003-ல் வெளிவந்த ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் அவரது தம்பி ரவி ஹீரோவாக அறிமுகமானார். இதுவும் தெலுங்கு படத்தின் ரீமேக் தான்.
ஜெயம் படம் மோகன் ராஜாவுக்கு மட்டுமின்றி அவரது தம்பி ரவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்துக்கு பின்னர் தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார் ரவி. ஜெயம் ரவியின் ஆரம்ப காலகட்டத்தில் அவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆகின. அதற்கு காரணம் மோகன் ராஜா தான். ஏனெனில் ஜெயம் ரவி முதல் நடித்த 5 படங்களை இயக்கியது அவரது அண்ணன் மோகன் ராஜா தான்.
ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி என ஜெயம் ரவியை வைத்து மோகன் ராஜா இயக்கிய ஐந்து படங்களுமே தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களாகும். இந்த 5 படங்களுமே மிகப்பெரிய ஹிட் அடித்தன. இதையடுத்து விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கினார் மோகன் ராஜா. இதுவும் அசாத் என்கிற தெலுங்கு படத்தை தழுவி தான் எடுக்கப்பட்டு இருந்தது.
இப்படி தொடர்ந்து ரீமேக் படங்களாக எடுத்து வெற்றிகண்டதால் அவருக்கு சொந்த படங்கள் இயக்க வராது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதையெல்லாம் தகர்த்தெறியும் வகையில் அவர் இயக்கிய படம் தான் தனி ஒருவன். அவர் இயக்கிய முதல் சொந்த படம் இதுதான். இப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி அதன் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக இருக்கிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சிரஞ்சீவியை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டாகி உள்ளார் மோகன் ராஜா. இப்படி பிசியாக உள்ள மோகன் ராஜா இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் மோகன் ராஜாவின் சொத்து மதிப்பு ரூ.40 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.