சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து அவரின் மருமகன் தனுஷ் படத்தை இயக்கப் போகிறார் நெல்சன் திலீப்குமார்.
ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் வெளியிடப்பட்ட காவாலா காவாலா பாடல் அனைவரையும் கவர்ந்துவிட்டது. ஜெயிலரை அடுத்து நெல்சன் திலீப்குமார் யாரை இயக்கப் போகிறார் என்பது தெரிந்துவிட்டது. நடிப்பு ராட்சசனான தனுஷை ஹீரோவாக வைத்து படம் இயக்கவிருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகிவிட்டது. அந்த படத்தை தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் உலக நாயகன் கமல் ஹாசன். தனுஷ், நெல்சன் திலீப்குமார் சேரும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். நெல்சனின் ஜெயிலர் படத்திற்கும் அனிருத் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு தனுஷ் பட வேலையை துவங்குவாராம் நெல்சன். ஜெயிலர் ரிலீஸான பிறகு தனுஷ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்குமாம். கமல் ஹாசன் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
தனுஷ் தற்போது டி50 படத்தை இயக்கி, நடித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் தான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ் படத்திற்காக 500 வீடுகள் கொண்ட பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. படத்தை ஒரே ஷெட்யூலில் ஷூட் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். அந்த படத்தில் சந்தீப் கிஷனும், எஸ்.ஜே. சூர்யாவும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கிறார்கள்.