ஹண்டாவைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரு சிங்கப்பூர்வாசிகளுக்கும் அத்தொற்று பரவவில்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொற்று நோய்களுக்கான முகமையான சி.டி.ஏ தெரிவித்துள்ளது.
எம்.வி. ஹோண்டியஸ் என்ற கப்பலில் இருந்து ஹண்டாவைரஸ் வைரஸ் பரவியதாக நம்பப்படும் நிலையில், அக்கப்பலில் பயணம் செய்த அவ்விருவரும் சிங்கப்பூரை அடைந்தததும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், 67 வயது மற்றும் 65 வயதுடைய அவ்விரு ஆடவர்களிடமும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூரின் தேசியப் பொதுச் சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், தற்போது அவர்களுக்கு ஹண்டாவைரஸ் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியான நிலையிலும் கூட, அடுத்த 30 நாட்களுக்கு அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








