உலகப் பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியில், நாட்டின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த ‘பேஸ்’ திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி, சில்லறை வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட 5 முக்கிய துறைகளில் வேலை இழப்பு அபாயம் அதிகரிக்கலாம் என அமைச்சு கணித்துள்ளது. இதனை எதிர்கொள்ள, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இத்திட்டத்தின் மூலம் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெறவுள்ளனர் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இதற்காக, வேலை இழந்த 56 ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்களுக்கு மறுவேலைவாய்ப்பு மற்றும் நிதி உதவி வழங்க பெர்கேசோ மூலம் 580 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் மற்றும் கிக் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டிற்காக எச்.ஆர்.டி கார்ப் மூலம் .100 மில்லியன் ரிங்கிட்டும் , பி-ஹெய்லிங் ஊழியர்களுக்காக பி.டி.பி.கே மூலம் 20 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மாணவர்கள் தொழில்பயிற்சி பெற டேலண்ட் கார்ப் மூலம் 10 மில்லியன் ரிங்கிட் மானியமும் வழங்கப்படுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனிதவள அமைச்சு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதியளித்துள்ளார்.








