ஸ்பெயின் போன்ற தூரத்து நாட்டு மக்களைக் குறிவைத்து, டெலிகிராம் செயலி மூலம் அனைத்துலக வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் நடமாட்டம் சொகுசு பங்களா ஒன்றில் முறியடிக்கப்பட்டு, 35 சீன நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வாரக் கண்காணிப்புக்குப் பிறகு, கடந்த மே 14-ஆம் தேதி இரவு 11.50 மணியளவில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் இந்த ‘அழைப்பு மையம்’ கண்டுபிடிக்கப்பட்டது என்று ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் கே. குமரேசன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 21 முதல் 39 வயதுடைய சந்தேக நபர்களில் 33 பேர் மோசடி முகவர்களாகவும், இருவர் சமையல்காரர்களாகவும் மாதச் சம்பளத்திற்குப் பணிபுரிந்து வந்துள்ளனர். இக்கும்பல் கடந்த பிப்ரவரி முதல் அனைத்துலக அளவில் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்திலிருந்து 35 கைபேசிகள், 10 மடிக்கணினிகள் உள்ளிட்ட 65 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கும்பலின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட சரவாக்கை சேர்ந்த முகமது லிங் முகமட் ஆடம் லிங் என்ற 25 வயதுடைய நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று குமரேசன் தெரிவித்தார்.








