வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கை நோக்கி, 195.9 ஆவது கிலோ மீட்டர், மலாக்கா அலோர் காஜாவில் ஏற்பட்ட விபத்தில் விரைவுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஒரு குழந்தை உட்பட 17 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
கோலாலம்பூரிலிருந்து மலாக்கா நோக்கிச் சென்ற அந்தப் பேருந்து, தீயில் முழுமையாக மூழ்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். இன்று பிற்பகல் 3.04 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற அலோர் காஜா மற்றும் ஆயர் குரோ தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் பேருந்து 70 விழுக்காடு சேதமடைந்தது. பேருந்திலிருந்த 16 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை என அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட வேளையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








