கவனக்குறைவாக வாகனம் ஓட்டி இரு சகோதரிகள் உயிரிழக்க காரணமானதாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயது முதியவர், இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
நீதிபதி ஏ. கார்த்தியாயினி முன்னிலையில் ஆஜரான ஆங் கிம் லாய் என்ற ஓய்வு பெற்ற ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், மாண்டரின் மொழியில் வாசிக்கப்பட்டன.
கடந்த மே 15-ஆம் தேதி, மாலை 7.30 மணியளவில், ஜாலான் பெக்கான் பாரு பகுதியில், தனது எஸ்.யூ.வி வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி, 62 வயதான வோங் நியோக் சிம் மற்றும் 57 வயதான வோங் நியோக் ஃபோங் ஆகியோரின் உயிரிழப்பிற்கு காரணமானதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதத்துடன், ஓட்டுநர் உரிமமும் தற்காலிக இரத்து செய்யப்படும்.








