அரச குடும்பத்தை குறிவைத்து வெளியிடப்படும் அவதூறு மற்றும் அவமதிப்பான உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி, மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி, டிக் டாக் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேற்று மாமன்னரைக் குறிவைத்து போலியான மற்றும் அவமதிப்பான பதிவுகளை வெளியிட்ட போலி டிக் டாக் கணக்கு ஒன்று கண்டறியப்பட்டதாக எம்.சி.எம்.சி தெரிவித்துள்ளது.
அதில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் படங்களும் இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை அறிவிப்புகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டபோதிலும், அத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றுவதிலும், அவை மேலும் பரவுவதைத் தடுப்பதிலும், டிக் டாக் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, எம்.சி.எம்.சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று மாமன்னரை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்த டிக்டாக் பதிவு தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, ஜோகூர் அரண்மனை அலுவலகம், எம்.சி.எம்.சியை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.








