இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள குளோபல் சுமூத் புளோட்டிலா (ஜி.எஸ்.எஃப்) 2.0 மனிதநேய செயற்பாட்டாளர்களை, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம், உடனடியாக விடுவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, முழு உறுதியும் அர்ப்பணிப்பையும் வழங்குவதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதியளித்துள்ளார்.
இந்த உறுதியை, பிரதமர் இன்று, தொலைபேசி உரையாடலின் வாயிலாக, சுமூத் நுசாந்தாரா தகவல் மையமான எஸ்.என்.சி.சிக்கு தெரிவித்ததாக, அதன் தலைமை இயக்குநர் டத்தோ சானி அரபி அப்துல் ஆலிம் அரபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 மலேசியர்கள் உட்பட அனைத்து செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்கள் கெட்சியோட் சிறையில் அடைக்கப்படாமல் தடுக்கவும் அன்வார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் இன்று சிப்பாங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சானி அரபி குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக துருக்கி அதிபர், ரஜப் தையிப் எர்டோகன் உடன் அன்வார் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், விஸ்மா புத்ரா, துருக்கி மற்றும் பல நாடுகளுடன் இணைந்து தூதரக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசானும் எஸ்.என்.சி.சியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.








