சுங்கைப்பட்டாணி, லெஜெண்டா ஹைட்ஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில், ஐஸ் லோரி மூலம் சட்டவிரோதமாக டீசல் கடத்திய 61 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவரது லோரியை சோதனையிட்ட கெடா மாநில உள்நாட்டு வாணிபம், மற்றும் பயனீட்டாளர் அமைச்சின் அதிகாரிகள், உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த IBC தொட்டியில் 1,000 லிட்டர் டீசல் இருப்பதைக்கண்டறிந்தனர். அவர் சுங்கைப்பட்டாணியில் உள்ள 4 பெட்ரோல் நிலையங்களில் இருந்து இந்த டீசலை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லோரி உட்பட 38 ஆயிரத்து 5 ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் முதல் குற்றத்திற்கு 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம்.













