சிகிச்சை பெறாமலேயே அரசுத் துறை ஒன்றில், சுமார் 53 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போலி மருத்துவக் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் கீழ் தம்பதியர் உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பேரா மாநில எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நிறுவன இயக்குநர் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 2024 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை உடல்நல மறுவாழ்வு சிகிச்சைக்கான போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த மோசடியில் ஈடுபட்டது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஈப்போ நீதிமன்ற உத்தரவின்படி தம்பதியருக்கு 7 நாட்கள் காவலும், நிறுவன இயக்குநருக்கு 5 நாட்கள் காவலும் விதிக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








