தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து, ஜப்பானின் தென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு, அனுப்பப்பட்ட மூன்று யானைகள் தொடர்பான விவகாரத்தில், எந்தவித வர்த்தக பரிவர்த்தனையோ அல்லது பணப் பரிமாற்றமோ இடம்பெறவில்லை என்று தைப்பிங் நகராட்சி மன்றம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், முழுமையாக உயிரியல் பூங்காக்களுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஒத்துழைப்பு திட்டம் மட்டுமே என்று நகராட்சி மன்றத் தலைவர் முகமது அக்மல் தஹ்லான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் யானைகள் விற்பனை, கொள்முதல் அல்லது நிதி பரிமாற்றம் எதுவும் இடம்பெறவில்லை என முகமது அக்மல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
யானைகள் இடமாற்றமானது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் என சமூக ஊடகங்களில் கூறப்படும் ஊகங்கள் அனைத்தும், முற்றிலும் தவறானவை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








