சுங்கை பூலோ மக்களின் உள்ளூர் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் 10 ஆயிரம் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்ற வியப்பூட்டும் அறிவிப்பை மனிதவள அமைச்சரும், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ளார்.
சுங்கை பூலோவில் இன்று நடைபெற்ற 'சிறந்த எஸ்.பி.எம். மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழாவில்' உரையாற்றிய அவர், இந்த சைக்கிள்கள் வழங்கும் திட்டம் குறித்து முன்னரே திட்டமிடவில்லை என்றும், உள்ளூர் மக்களின் பயணத் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்த உடனடி முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கை பூலோவில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும், போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு, தங்களது வசிப்பிடங்களுக்குள்ளேயே குறுகிய தூரங்களுக்குப் பயணம் செய்வதாகக் குறிப்பிட்ட ரமணன், அவர்களுக்கு உதவும் வகையில் இந்த 10,000 இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சைக்கிள் தேவையுடையவர்களுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த சைக்கிள்கள் விநியோகிக்கப்படும் என்றும் ரமணன் உறுதி அளித்தார்.
இதனிடையே, SPM தேர்வில் 4A மற்றும் அதற்கு மேல் பெற்ற 934 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
இதற்காக மொத்தம் 3 லட்சத்து 18 ஆயிரத்து 900 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரமணன் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 7A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு 4A பெற்ற மாணவர்களும் இந்த உதவியை பெறுகின்றனர் என்றும் ரமணன் தெரிவித்தார்.








