சுபாங் ஜெயா, மே.10-
மலேசியாவின் மக்களாட்சி நிலையும் ஊடகச் சீர்திருத்தங்களும், ஊடகவியலாளர்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் பணியிடப் பாதுகாப்பையும் சார்ந்தே அமைந்துள்ளதாக CIJ எனப்படும் சுதந்திர ஊடக மையம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஊதியம், முறையற்ற வேலை ஒப்பந்தங்கள் ஊடகச் சுதந்திரத்தைப் பாதிப்பதோடு, போதிய வருமானம் இல்லாதது மூத்த பத்திரிகையாளர்களையும் பகுதி நேரப் பணியாளர்களையும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக அதன் செயல்முறை இயக்குநர் Wathshlah G. Naidu அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.
ஊடகங்களின் உரிமையாளர்கள் செய்திகளின் போக்கைத் தீர்மானிக்கும் 'ஊடகக் கையகப்படுத்தல்' குறித்து எச்சரித்துள்ள CIJ, தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஊடகக் கவுன்சில் உருவாக்கம் ஆகியவை ஊடக அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்க அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








