கோலாலம்பூர், ஜூன்.05-
கோலாலம்பூர், பங்சார், லோரோங் மாரோஃப்பில் ஒரு கட்டுமானத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடவரின் சடலம், ஒன்பது நாட்களுக்கு முன்பு காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையே என்று உறுதிச் செய்யப்பட்டது.
சவப் பரிசோதனைக்குப் பிறகு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படும் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாஹ்மூட் தெரிவித்தார்.
அந்த பிரிட்டிஷ் பிரஜையின் குடும்பத்தினர் கோலாலம்பூர் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் சடலத்தை அடையாளம் கண்டனர் என்று ஏசிபி கூ மாஷாரிமான் குறிப்பிட்டார்.
ஒரு பொறியிலாளரான 25 வயது ஜோர்டன் ஜோன்சன் டோயில் என்ற அந்த பிரிட்டிஷ் பிரஜை, மலேசியாவிற்குத் தனியொரு நபராகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மே 27 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார்.
அன்று இரவு பங்சாரில் உள்ள ஐரிஷ் மதுபான விடுதிக்கு அவர் சென்றிருந்த போது காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.








