சிலாங்கூர் மாநில அரச குடும்பத்துக்கு ஆதரவாக, வரும் சனிக்கிழமை, சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தில், ஒற்றுமைப் பேரணியை நடத்தவுள்ளதாக அம்மாநில பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு அறிவித்துள்ளது.
ஜசெக கட்சித் தலைவர்கள் சிலரின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்கள், மாநில அரச குடும்பத்தின் மரியாதையையும், அதிகாரத்தையும் அவமதிப்பது போல் இருந்ததாக அப்பிரிவின் தலைவர் சுக்ரி ஒமர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இப்பேரணியானது, சிலாங்கூர் மாநில சுல்தானுக்கு, மக்களின் அசைக்க முடியாத விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அமையவுள்ளதாகவும், இஸ்லாம், மலாய் மக்களின் உரிமைகள் மற்றும் மாநில அரச குடும்பத்தின் அதிகாரத்தை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் சுக்ரி ஒமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சட்டத்திற்கு இணங்க, இப்பேரணி குறித்து சிலாங்கூர் மாநில போலீசாருக்கும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








