கிளாந்தான், கெத்தேரே பகுதியில், 19 வயதுடைய நூர்ஃபிஸ்யா சுல்கிஃப்லி, 61 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரி மாணவர் ஒருவர் மீது கோத்தா பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி, இரவு 11.40 மணி முதல் மே 1-ஆம் தேதி அதிகாலை 12.20 மணி வரை,ஜாலான் பெங்காலான் பியா பகுதியில் நூர்ஃபிஸ்யாவைக் கொலை செய்ததாக, 19 வயது ஹாசிம் முகமது மீது குற்றம் சாட்டப்பட்டது.
மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ரைஸ் இம்ரான் ஹமீத் முன்னிலையில், குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, ஹாசிம் தலையசைத்து புரிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.
எனினும், கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் காரணத்தால், அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படலாம்.








