பிரபல தொழிலதிபரும், மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் தேசிய சம்மேளனமான MAICCI-இன் முன்னாள் தலைவருமான கென்னத் ஈஸ்வரன் இன்று அதிகாலை தமது 65-ஆவது வயதில் காலமானார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சமீப காலங்களாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 7 மணியளவில் பந்தாய் மருத்துவமனையில் காலமானதாக அச்சம்மேளனத்தின் நடப்பு தலைவர் என். கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கென்னத் ஈஸ்வரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் குன்றிய நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், அன்னாரின் இறுதிச் சடங்கானது காஜாங் கண்ட்ரி ஹைட்ஸ்-இல் உள்ள அவரது இல்லத்தில், வரும் திங்கட்கிழமை காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையில் நடைபெறும் என்றும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000 முதல் 2004-ஆம் ஆண்டு வரையில் MAICCI-இன் தலைவராகப் பணியாற்றியதுடன், மீண்டும் 2008 முதல் மேலும் 10 ஆண்டுகளுக்கு அந்த அமைப்பை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








