கோலாலம்பூர், ஜூன்.04-
பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமக்கு எதிராக யூஃசோப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கில், 8 சட்டக் கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் விடை காணும் வரை வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்குமாறு தாம் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறார்.
இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்வாரின் முதன்மை வழக்கறிஞர் K. ராஜசேகரன் இதனைத் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தாங்கள் உடனடியாக அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்க செய்யவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் முன்வைத்த 8 கேள்விகள், சுருக்கமானவையோ அல்லது கல்வி சார்ந்தவையோ அல்ல. மாறாக, தீர்க்கப்படாத அரசியலமைப்புச் சட்டம் தொடர்புடைய சிக்கல்கள் சம்பந்தப்படட் கேள்விகளாகும் என்று ராஜசேகரன் விளக்கினார்.
முன்னதாக, அன்வாரின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாயின், பிரதமர் அன்வார் எழுப்பியுள்ள கேள்விகள், 1964 ஆம் ஆண்டு நீதித்துறை மற்றும் நீதிமன்ற சட்டத்தின் பிரிவு 84 இல் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புக்கு முரணாக உள்ளது என்று தீர்ப்பு அளித்தார்.
யூஃசோப் ரவுத்தர் தொடுத்துள்ள சிவில் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கக் காரணமே இல்லை என்று கூறிய நீதிபதி ரோஸ் மாவார், வரும் ஜுன் 16 ஆம் தேதி திட்டமிட்டப்படி அவ்வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.








