பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் பகுதியில் பெய்த நான்கு மணி நேரத் தொடர் கனமழையால், கம்போங் லாசாவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் ஒரு மீட்டர் உயரம் வரை நீரில் மூழ்கின.
இன்று அதிகாலை 1.24 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகக் குறிப்பிட்ட பொது தற்காப்பு படை, கம்போங் செனெய்ன், கம்போங் ஜோங் மற்றும் கம்போங் பாவோன் உள்ளிட்ட சுற்றுவட்டாரச் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.
காலை 9 மணி நிலவரப்படி, இதுவரை தற்காலிக நிவாரண மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட சில குடியிருப்பாளர்கள் தங்கள் அண்டை வீட்டார் அல்லது உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது மழை ஓய்ந்து வானிலை சீராகியுள்ள நிலையில், பொது தற்காப்பு படையினர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.








