அரசு தலைமை வழக்கறிஞரான சட்டத்துறை தலைவர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆகிய பதவிகளைப் பிரிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா மூலம், இனி அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம் ஒரு தனி அதிகாரத்தின் கீழ் மட்டும் இருக்காது என்று சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் பெயர்களைப் பரிசீலித்து, நீதித்துறை மற்றும் சட்டத்துறை ஆணையம் வழங்கும் ஆலோசனையின் பேரில் மாமன்னரே இறுதி முடிவை எடுப்பார். இந்த புதிய முறையில் பிரதமரோ அல்லது அமைச்சரவையோ தலையிட முடியாது. இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்துறையின் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும் என்று அசாலினா இன்று தெரிவித்தார்.








