மலேசியாவிற்கு வேலை தேடி வரும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நலிவடைந்த பிரிவினர், வேலைவாய்ப்புக்கான கட்டணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர செலவுகளால் சுமைக்குள்ளாக்கப்படக் கூடாது என அனைத்துலக தொழிலாளர் அமைப்பான ஐ.எல்.ஓ வலியுறுத்தியுள்ளது.
நேர்மையான மற்றும் நெறிமுறைமிக்க வேலைவாய்ப்பு நடைமுறைக்கு இக்கொள்கை மிகவும் முக்கியமானது என ஐ.எல்.ஓ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கென 2019ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தரநிலையின்படி, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான எந்தவொரு கட்டணத்தையும் அவர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பாக மலேசியா இருதரப்பு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி விமானக் கட்டணம் உட்பட மலேசியாவில் ஏற்படும் செலவுகளை முதலாளிகளே ஏற்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டன.
எனினும், 2023ஆம் ஆண்டு முதல் முறையாக வேலை அனுமதியுடன் மலேசியா வந்த பல வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு, வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலைகள் அங்கு இல்லை என்ற அதிர்ச்சிகரமான புகார்கள் எழுந்துள்ளதாகவும் ஐ.எல்.ஓ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.








